Thursday, September 26, 2013

10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:–
அரசு பொதுத்தேர்வுகள்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வை சரியான முறையில் நடத்தி நேர்த்தியான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம்.
விடைத்தாளின் முதல் பக்கத்தில் ரகசிய கோடு, மாணவர்களின் புகைப்படம் ஆகியவை புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை தற்போது நடைபெறும் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரகசியமான இடங்களில் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கப்படும். அச்சடிக்கும் முன்பு பல முறை எழுத்துப்பிழை பார்க்கப்படும். அச்சடித்தபின்பு அவை வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். அங்கு ஷீல் சரியாக இருக்கிறதா? என்று அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்ப்பார்கள்.
முன்பு ஒரு பள்ளிக்கு 500 வினாத்தாள் தேவை என்றால் கூடுதலாக வினாத்தாள் அனுப்பப்படும். இப்போது கூடுதலாக ஒரு கட்டு மட்டுமே அனுப்பப்படும்.
மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் பிரிக்கப்படும்
முன்பு 50 வினாத்தாள் கொண்ட பார்சல், 100 வினாத்தாள் என்று இருக்கும்.
ஆனால் இப்போது அப்படி அல்லாமல் அனைத்து கட்டுகளும் தலா 20 வினாத்தாள் கொண்டே இருக்கும். அச்சடிக்கப்படும் இடங்களில் இருந்தே 20 வினாத்தாள் கொண்டு பார்சல் செய்யப்பட்டுதான் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படும்.
அதுபோல வினாத்தாள் பார்சல் தேர்வு அறையில் பிரிக்கும்போது மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு அறையிலும் தலா 2 மாணவர்கள் கையெழுத்திடுவார்கள்.
இந்த முறையின் காரணமாக வினாத்தாள் எந்த காரணம் கொண்டும் வெளியாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம்.
இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment