Friday, September 13, 2013

மழை விடுமுறை எதிரொலி: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கு புதிய கேள்வித்தாள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மழை காரணமாக, நேற்று விடுமுறை. ஆனால், பிற மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றைய காலாண்டு தேர்வுகள், வழக்கம் போல் நடந்தன. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், புதிய கேள்வித்தாள்கள் அச்சிடப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், மாநில அளவில், பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 10ம் தேதி, தேர்வு துவங்கியது. 10ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வும், 11ம் தேதி, மொழி இரண்டாம் தாள் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்திருக்க வேண்டும். அதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய, மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து, இதர மாவட்டங்களில், நேற்று, மொழி முதல் தாள் தேர்வு நடந்தது.
இந்நிலையில், கடும் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், இம்மாவட்டங்களில், நேற்று நடக்க வேண்டிய எந்த தேர்வும் நடக்கவில்லை. "நேற்றைய தேர்வு, தேர்வு முடியும் நாளுக்கு மறுநாள் நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள், மாநில அளவில், பொதுத் தேர்வாக நடப்பதால், சிக்கல் எழுந்தது. மற்ற மாவட்டங்களில், நேற்று தேர்வு நடந்து விட்டதால், அதே கேள்வித்தாளை வைத்து, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், தேர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்னை குறித்து, மூன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளின் அறிவுரையின்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய ஆங்கிலம் முதல் தாள் கேள்வித்தாளும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய, தமிழ் முதல் தாள் கேள்வித்தாளையும் அச்சடித்து, தேர்வை நடத்த, முடிவு செய்யப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு, வரும், 21ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, வரும், 20ம் தேதி வரையிலும் நடக்கின்றன. எனவே, இந்த தேதிகளுக்கு, அடுத்த நாளில், நேற்றைய தேர்வு நடக்கும். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு தேர்வை, 56,790 பேரும், பிளஸ் 2 தேர்வை, 53,782 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2, 10ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள், அந்தந்த மாவட்ட அளவில், பொதுத் தேர்வாக நடக்கிறது. இதில், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அமலில் உள்ளது. இதனால், தொடர் மதிப்பீட்டு முறையின்படி, செய்முறைகளுக்கு, 40 மதிப்பெண்களும், தியரி (எழுத்து தேர்வு)க்கு, 60 மதிப்பெண்களும் பிரிக்கப்பட்டுள்ளன.
தியரி தேர்வு, மாவட்டங்களில் நடந்து வருகின்றன. இதில், தேர்வுக்கான நேரம் ஒதுக்கீட்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு உள்ளிட்ட சில வகுப்புகளுக்கான கேள்வித்தாளில், 2:30 மணி நேரம், 3:00 மணி நேரம் என, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமாக அச்சடிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும், 16ம் தேதியில் இருந்து தான், தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுத் தேர்வாக இல்லாமல், ஒவ்வொரு பள்ளியும், தனித்தனியாக கேள்வித்தாளைத் தயாரித்து, தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், அப்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாளுக்கு, தன்னிடம், அனுமதி பெற வேண்டும் எனவும், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, மாவட்ட அளவில், பொதுத் தேர்வாக நடந்த நிலையில், இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இதில், பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment