Wednesday, September 4, 2013

இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும் ஜூன் முதல் செப்., வரையிலான முதல் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன. 90 சதவீதம் அளவிற்கு, பாடப்புத்தகங்கள் தயாராகிவிட்டன.
இதையடுத்து, அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, புத்தகங்கள், அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பாடநூல்கழக வட்டாரங்கள் கூறியதாவது:
பெரும் அளவிற்கு, புத்தகங்கள், அச்சிடப்பட்டு விட்டன. எனவே, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, புத்தகங்கள் சென்று விட்டன. எனவே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதில், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருந்தாலும், இந்த மாதத்திற்கு உள்ளாகவே, முழுமையான அளவில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், புத்தகங்களை கொண்டு சென்று, வினியோகம் செய்வதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை, முழுவீச்சில் செய்து வருகிறது. இவ்வாறு, பாடநூல்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்மாத இறுதியில் இருந்து, பாடநூல்கழக அலுவலகத்தில், இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

 

No comments:

Post a Comment