Tuesday, September 24, 2013

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரங்கராஜன் கூறியதாவது: பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக தரம் உயர்த்திட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும். பதவி உயர்வு மற்றும் இட மாறுதலில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை, முன்னுரிமை பட்டியல் படி, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இதை வரைமுறைப்படுத்தி, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில், வரும் 25ம் தேதி, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு, ரங்கராஜன் கூறினார்.

No comments:

Post a Comment