Thursday, September 12, 2013

புறக்கணிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்?: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கல்வித்துறை நிராகரித்துள்ளது.
கோவையில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மெட்ரிக் பள்ளி மாணவர்களின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள், தரப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். முன்னிலை இடங்கள் அனைத்து பிரிவுகளிலும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தட்டிச்சென்றுள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில், "மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 7ம் தேதி நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் எவ்வித அறிவிப்பும் இன்றி, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பயிற்சி வகுப்பில், பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று தரவரிசை பட்டியலில் உள்ள மெட்ரிக் பள்ளி மாணவர்களுடன், கடந்த ஓராண்டு காலமாக மட்டுமே பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களால், எவ்வாறு போட்டியிட முடியும்? ஒவ்வொரு முறையும் போதிய பயிற்சிகள் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அனுபவமும் இல்லாத ஆசிரியர்கள் தான் பயிற்சி அளிக்கின்றனர்" என்றார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு) திருவளர்செல்வி கூறுகையில், "அரசு விதிமுறைகளின் படி சர்வதேச போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நல்ல நோக்கத்துடன் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்த வேண்டும் என்பது மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்ய இயலாது.
மாணவர்களின் திறமைகளை மட்டுமே மதிப்பீடு செய்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகளை அளித்து, திறமையான மாணவர்களாக உருவாக்காமல், தனியாக போட்டி நடத்த கோரிக்கை விடுவது, குறுகிய மனப்பான்மையை காட்டுவதாக உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment