Sunday, September 29, 2013

அனைவருக்கும் மேல்நிலை கல்வித் திட்டம்: நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல்

அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் (சிஏபிஇ) நியமித்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில உயர் கல்வித் திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யும் வகையில் அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த 2012 நவம்பரில் சிஏபிஇ ஒப்புதலும் அளித்தது.

இந்த புதியத் திட்டத்துக்கு, கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மும்பை, போபால், தில்லி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இத் திட்டத்துக்கு மத்திய நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ள இத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 316 மாநில பல்கலைக்கழகங்களும், 13,024 கல்லூரிகளும் பயன்பெற உள்ளன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் வளர்ச்சி நிதி மற்றும் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment