Friday, September 13, 2013

டிஇடி: தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.
இதையடுத்து, தமிழ் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா என பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன என நிபுணர் குழு அறிக்கை அளித்ததால், புரியாத சில கேள்விகள் மட்டும் தேர்விலிருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. வழக்கு விசாரணையும் செப்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள். முதுநிலை தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குப் பிறகே தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment