Sunday, January 5, 2014

பிளஸ் 2 கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஓர் ஆசிரியர், இரண்டு பள்ளிகளில் பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறியாகி உள்ளது.
தகுதித் தேர்வை காரணம் காட்டி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு, டிஸ்மிஸ் செய்தது. இதனால், பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் கற்றுக் கொடுப்பதில், மாநில அளவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஒரு பள்ளியில் பணியாற்றும், கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றொரு பள்ளியில் கூடுதல் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம், கம்ப்யூட்டர் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்கிறது. ஆனால், தேர்வுக்கு முன், பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் விழி பிதுங்கி உள்ளனர். பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் இல்லாததால், வேறு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பாடம் நடத்துகின்றனர்.
இதனால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு, கடுமையாக பாதிக்கும். தகுந்த முன் ஏற்பாடு இல்லாமல், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ததால் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கூறியதாவது: மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதில் அரசு நலத்திட்டங்கள், பயன் பெற்ற விவரம், ஆன்-லைன் பணிகள் உட்பட, அனைத்து தகவல் தொழில்நுட்ப பணிகள் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், "தலையில் தான்" விழுகின்றன. இதற்கிடையே இரு பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய உத்தரவு அதிர்ச்சியாக உள்ளது. இதனால், பாடம் நடத்தும் சூழ்நிலை எங்களுக்கு இல்லை; மாணவர்களின் கற்றலும் பாதித்துள்ளது.
பொதுத் தேர்வில் இதன் வெளிப்பாடு தெரியும். தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்கள் நலன் கருதி, டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்களை தற்காலிகமாக அழைத்து மீண்டும் பாடம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment