Thursday, January 8, 2015

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் திட்டம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு, தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும் ’அமெரிக்கன் பவுண்டேஷன்’, ’டெல்’ நிறுவனம் இணைந்து, ’மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறைகள்’ திட்டத்தை விரைவில் துவங்க உள்ளன.

கோவை மாநகராட்சியில், 16 மேல்நிலை பள்ளிகள், 10 உயர்நிலை பள்ளிகள், 41 நடுநிலை பள்ளிகள், 16 ஆரம்ப பள்ளிகள் என, 83 பள்ளிகள் உள்ளன. இணைந்த வகுப்பறைகள் திட்டத்தின் வாயிலாக, முதல் கட்டமாக, மண்டலத்துக்கு ஒரு பள்ளி வீதம், ஐந்து மாநகராட்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், மாணவர்களின் சிந்தனைத்திறனை தூண்டும் வகையிலான கருவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன கம்ப்யூட்டர்களில் பல்வேறு மென்பொருட்கள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருட்களின் வாயிலாக, மொழியறிவு, கணிதம், அறிவியல், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், புள்ளியியல், பொருளியல், வணிகவியல், வானவியல், வானிலைஅறிவியல் உள்ளிட்ட, ஏராளமான துறை சார்ந்த தகவல்கள் உள்ளன.
மாணவர்கள் விரும்பிய தகவல்களை எளிதாக உடனுக்குடன் எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கத்தையும், ஆசிரியர் சொல்வதைப்போல், கம்ப்யூட்டர் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ஓ.எச்.பி.,( ஓவர் ஹெட் பிரசன்டேஷன்) மற்றும் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் வாயிலாக, வகுப்பறையிலுள்ள மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பாட தகவல்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய கரும்பலகையில் ஒலி, ஒளி காட்சியாக பிரதிபலிக்கப்படுகிறது.
இம்முறை, ’இ-கார்ப்’ என்றழைக்கப்படுகிறது. இவற்றோடு, ’வைபை’ வாயிலாக, இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான தகவல்களை, தேவையானபோது, உடனுக்குடன் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவையனைத்தும் இணைக்கப்பட்டு, பள்ளியில் ஒருதொழில்நுட்ப ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் வாயிலாக மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வகுப்பறைகள் திட்டத்தை செயல்படுத்த, ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பீளமேடு மாநகராட்சி மேல்நிலை பள்ளி, உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளி, பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி என, ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக கோவை மாநகராட்சி, ஒரு பள்ளிக்கு, 20 லட்ச ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கல்வி அலுவலர்வசந்தா கூறுகையில், ”இத்திட்டம் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விஸ்தரிக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment