Wednesday, October 29, 2014

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது.
இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில் 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம், எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment