Tuesday, December 24, 2013

முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு

நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை 21ல், தேர்வு நடந்த நிலையில் தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவு அக்., 7ம் தேதி வெளியானது. வழக்கு காரணமாக தமிழ் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

நீண்ட இழுபறிக்குப் பின், தமிழ் தேர்வு முடிவை, டி.ஆர்.பி., நேற்று தன் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. தமிழ் பாடத்திற்கு 640 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 30ம் தேதி வேலூர், விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய ஐந்து இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஒரு பணிக்கு ஒருவர் என்ற வீதத்தில், தகுதியானவர் பட்டியலை மதிப்பெண்களுடன் இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
எனினும் ஒரே பிரிவில், சரி சமமான மதிப்பெண்களை பெற்ற தேர்வரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி தேர்வெழுதிய 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் இறுதி விடைகளும் (கீ - ஆன்சர்), டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவு குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பில், "தற்போதைய தேர்வு, தற்காலிகமானது. இறுதி முடிவு, கோர்ட் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரருக்கு, அனுப்பபட மாட்டாது. இணையதளத்தில் இருந்து, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.
மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், தயாநிதி என்பவர் 124 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். செல்வி என்ற தேர்வர் 89 மதிப்பெண் பெற்று கடைசி இடம் பிடித்தார். எழுத்து தேர்வு மதிப்பெண்ணுடன் பணி அனுபவம், பதிவுமூப்பு உள்ளிட்டவற்றுக்காக ஏழு மதிப்பெண் வழங்கப்படும். இரு மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment