Thursday, December 19, 2013

பள்ளிக்கு யானைகள் "விசிட்": சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

வால்பாறை அருகே, சுற்றுச்சுவர் இல்லாத துவக்கப்பள்ளிக்கு, யானைகள் அடிக்கடி விசிட் அடிப்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் 43 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், 8 நடுநிலைப் பள்ளிகளும், 9 அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளும், 2 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இது தவிர 5 அரசு நலப்பள்ளி, அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி உட்பட மொத்தம் 88 பள்ளிகள் செயல்படுகின்றன.

இதில், காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில் 36 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், அடிக்கடி வனவிலங்குகள் வருகின்றன. குறிப்பாக காட்டுயானைகள் பள்ளிக்கு "விசிட்" அடித்து சேதப்படுத்துகின்றன. இதுதவிர, தேயிலைத் தோட்டத்திலிருந்து பாம்பு, சிறுத்தை போன்றவையும் பள்ளி வகுப்பறைக்குள் செல்ல வாய்ப்புள்ளது என்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த பள்ளிக்கு வந்த யானைகள் கூட்டம், கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறையினர், தொழிலாளர்களுடன் இணைந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியதால், பள்ளி வகுப்பறை பாதுகாப்பாக மாறியது. யானைகள் அடிக்கடி பள்ளிக்கு விசிட் அடிப்பதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திறந்தவெளியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளியை சுற்றிலும், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, "கருமலை குரூப் டீ எஸ்டேட் பகுதியில் 5 அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலை பள்ளியும் உள்ளன. இந்தப்பள்ளி தனியார் எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் எஸ்.எஸ்.ஏ.,சார்பில் கட்டித்தர இயலாது.
பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும் வகையில், இந்த எஸ்டேட் நிர்வாகம் பள்ளிகளை அரசிடம் ஒப்படைத்தால், இந்தப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.

No comments:

Post a Comment