Tuesday, February 3, 2015

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது. மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

மானியம் ஒழிப்பு: முதற்கட்டமாக, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த இரு எரிபொருட்களின் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், அவற்றின் விலைகள், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சமையல் எரிவாயு வினியோகத்தில் நடக்கும் முறைகேடுகளால், மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வசதி படைத்தவர்களுக்கு, குறிப்பாக, ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, அதாவது, 30 சதவீத வருமான வரி வரம்பில் வருவோருக்கு, மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, முழுவதுமாக வாபஸ் பெற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
குறையலாம்: அதேநேரத்தில், ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை (20 சதவீத வருமான வரி வரம்பில் உள்ளவர்கள்) உள்ளவர்களுக்கும், மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது மானியத்தின் அளவு குறைக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பை, இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியிட, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தீவிரமாக பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அரசு வழங்கும் மானியமானது, தகுதியானவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில், தற்போதைய மத்திய அரசு அக்கறை காட்டி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மேலும், குழாய் மூலமான எரிவாயு வினியோகிக்கும் திட்டத்திற்கு, ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குழாய் எரிவாயு வினியோக திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.63 ஆயிரம் கோடி :
*நடப்பு நிதியாண்டில், சமையல் எரிவாயு உட்பட, பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம், 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை, 15 கோடி.
*இவர்களில், ஐந்து லட்சத்திற்கும் மேலான வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

No comments:

Post a Comment