Tuesday, February 3, 2015

4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு

’சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு ஏன்?
மணலி, சடையன்குப்பத்தில், மாநகராட்சி நடுநிலை பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில், இரு மாணவர்கள் காயமடைந்தனர். கடந்த ஆண்டு, ஜனவரியில், சம்பவம் நடந்தது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கட்டட வசதி, கழிப்பறை, குடிநீர், இருக்கை, முதல் உதவி என, அடிப்படை வசதிகளை அளிக்கவும், அதை கண்காணிக்க, நிரந்தர குழுவை அமைக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்திகேயன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, ’முதல் பெஞ்ச்’, பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் குழுவை அமைத்து, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன், அறிக்கை தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: 
சென்னை மாநகராட்சி நடத்தும், 281 பள்ளிகளில், 68 பள்ளிகள், அரசாணையில் கூறியுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றி உள்ளது என்றும் மற்ற பள்ளிகளில் சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகள், நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஏப்ரலுக்குள்...:
சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என, மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்குள், குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய, சென்னை மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அப்போது தான், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும்போது, அனைத்து வசதிகளும், பள்ளிகளுக்கு கிடைத்திருக்கும்.
அறிக்கை அவசியம்:
மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, நீதிமன்றம் கண்காணிக்கும். நான்கு மாதங்கள் வரை காத்திருக்காமல், அவ்வப்போது மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளை, நாங்கள் கவனிக்க ஏதுவாக, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எந்தெந்த பள்ளிகளில், எந்த அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை, குறிப்பிட வேண்டும். விசாரணை, மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, ’முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment