Thursday, November 7, 2013

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்" என 7,000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாநில பதிவு மூப்புப்படி, 2009ம் ஆண்டில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2013 வரை, பணி மாறுதல் கலந்தாய்வு வாய்ப்பு அளிக்கவில்லை. அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. "இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்" சார்பில் பணிமாறுதல் கோரி, தனித்தனியாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
"சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட மாறுதல் கேட்டால், விதிகளுக்கு உட்பட்டு வழங்கலாம்" என கடந்த செப்டம்பரில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகவுள்ளன.
இதில், தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் அளிக்கும் பட்சத்தில், மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விடும். இதனால், பல ஆண்டுகளாக போராடி பெற்ற கோர்ட் தீர்ப்பிற்கு, எந்த பலனும் இல்லாமல் போய் விடும் என்ற அச்சத்தில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக மாறுதல் இன்றி, 7,000 ஆசிரியர்கள் குடும்பத்துடன் தவிக்கின்றனர். 2012ல் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 9,567 இடைநிலை ஆசிரியர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில் நியமனம் பெற்றனர். டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, காலியான பணியிடங்களில் நியமித்தால், ஏற்கனவே தவிக்கும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மேலும் பாதிக்கப்படுவர்.
டி.இ.டி., யில் தேர்ச்சி பெறுவோர் நியமனத்திற்கு முன், 2009க்கு பின், நியமனம் பெற்ற எங்களுக்கு, சிறப்பு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு பரிந்துரையின்படி, 7,000 ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமும் மாற்றியமைக்க, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராபர்ட் கூறினார்.

No comments:

Post a Comment