Friday, November 8, 2013

டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.

டி.இ.டி., தேர்வின், உத்தேச விடைகளை டி.ஆர்.பி., வெளியிட்டபோது, குளறுபடியான கேள்விகள், விடைகள் குறித்து, தேர்வர்கள் அளித்த விண்ணப்பங்களின் மீது, டி.ஆர்.பி., சரியான முடிவை எடுக்கவில்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சரியான விடைகளுக்கு, மதிப்பெண் அளிக்காததால், ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் பலரும் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளனர்.
ஆறரை லட்சம் பேர் எழுதிய, டி.இ.டி., தேர்வின் முடிவை, 5ம் தேதி இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. தேர்வு முடிவுடன், தேர்வுகளுக்கான இறுதி விடைகளையும் வெளியிட்டது. உத்தேச விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டபோது, விடை குளறுபடிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, 2,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம், மனு அளித்தனர். இந்த மனுக்களை, பாடவாரியான நிபுணர்கள் குழுவிடம் ஆய்வு செய்து, இறுதி விடைகளை தயாரித்து, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இறுதி விடைகளை பார்த்த தேர்வர்கள் பலரும், அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்வர்கள் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு, நிவாரணம் அளிக்கப்படவில்லை; உரிய மதிப்பெண் வழங்கவில்லை என தேர்வர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். கடந்த இரு நாட்களாகவே, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., வந்து விவரம் கேட்டபடி உள்ளனர். ஆனால், "டி.ஆர்.பி., தரப்பில், சரியான பதில் அளிப்பதில்லை" என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டி.இ.டி., தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால்தான், தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார். ஆனால், சரியான விடைகளுக்கு, டி.ஆர்.பி., மதிப்பெண் அளிக்காததால், 88, 89 மதிப்பெண்கள் எடுத்த ஏராளமான தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த, பூவிழி கூறியதாவது: நான், ஆங்கில பட்டதாரி. டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை எழுதினேன். 88 மதிப்பெண் கிடைத்துள்ளது. இன்னும், இரு மதிப்பெண் கிடைத்திருந்தால், நான் தேர்ச்சி பெற்றிருப்பேன். தேர்வுக்குப் பின், தற்காலிக விடைகளை டி.ஆர்.பி., வெளியிட்டது. அதைப் பார்த்ததும், இரு கேள்விகளுக்கு எனக்கு மதிப்பெண் கிடைக்காத நிலையை அறிந்து, டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்தேன். என்னுடைய, "சி" வகை கேள்வித்தாளில், 66வது கேள்விக்கு, "ஏ" விடை சரி என டி.ஆர்.பி., தெரிவித்திருந்தது.
ஆனால், "சி" விடைதான் சரி. இதற்கான ஆதாரத்தையும், டி.ஆர்.பி.,யிடம் வழங்கியுள்ளேன். இறுதி விடையில், "சி" விடைக்கான ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், வழங்காமல், "ஏ" தான் சரி என மீண்டும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதேபோல், 69வது கேள்வி, இலக்கண வகையானது. ஆப்ஷன் விடை தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால், "இதற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்" என கேட்டிருந்தேன்; இதற்கும் மதிப்பெண் வழங்கவில்லை. இந்த இரு கேள்விகளுக்கும் மதிப்பெண் வழங்கியிருந்தால், நான் தேர்ச்சி பெற்றிருப்பேன்.
இதே பிரச்னையால் பாதிக்கப்பட்ட என் நண்பர்கள் சிலர், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர். "எக்காரணம் கொண்டும், இறுதி விடையில் மாற்றம் செய்ய முடியாது" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், என்னைப் போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பூவிழி கூறினார்.
சென்னை, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர் கூறியதாவது: "பி" வகை கேள்வித்தாளில், 86வது கேள்விக்கு (பூவிழி தெரிவித்த, 66வது கேள்வி), "சி" விடைதான் சரி. இதற்கு, லயோலா கல்லூரி பேராசிரியர் எழுதிய புத்தகம் ஆதாரமாக உள்ளது. ஆனால், தற்காலிக விடையில் தெரிவித்தது போல், "ஏ" தான் சரி என, இறுதி விடையிலும் தெரிவித்துள்ளனர். இப்படி, மேலும் இரு கேள்விகள் உள்ளன. நாங்கள் இருவருமே, 89 மதிப்பெண் பெற்றுள்ளோம்.
86வது கேள்விக்குரிய ஒரு மதிப்பெண் வழங்கினால், நாங்கள், தேர்ச்சி பெற்று விடுவோம். தற்காலிக விடை வெளியிட்டதும், இந்த பிரச்னை குறித்து, ஆதாரத்துடன் டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்களது கோரிக்கையை டி.ஆர்.பி., பரிசீலனை செய்யவில்லை. டி.ஆர்.பி.,க்கு சென்றபோதும் அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால், கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சரியாக செய்துள்ளோம்
தேர்வர் புகார் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்வர்களின் விண்ணப்பங்களை, நன்றாக பரிசீலனை செய்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவின் ஆலோசனையை பெற்றுதான் இறுதி விடைகளைத் தயாரித்து, அதன் அடிப்படையில் தேர்வு முடிவையும் வெளியிட்டுள்ளோம். முதுகலை ஆசிரியர் விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை மனதில் கொண்டு, டி.இ.டி., தேர்வு முடிவை வெளியிடுவதில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment