Wednesday, November 13, 2013

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 60 சதவீதத்துக்கும் மேல் உடல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக பகல் நேர பாதுகாப்பு மையம்
(டே- கேர் சென்டர்) செயல்பட்டு வருகிறது.
இம்மைய குழந்தைகளின் ஆரோக்கிய உணவுக்காக ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு காலை பாதாம் பால், ஆப்பிள், பேரிச்சை பழம், பிளம் கேக், போன்றவைகளும், மதியம் பல்வகை உணவுகள், மாலை நேரம் பால், பழம், சுண்டல், சோயா சுண்டல் என சுவையுடன் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் இதற்கான நிதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் டே- கேர் சென்டர்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனை மேற்கோள்காட்டும் விதமாக நவ., 9ம் தேதி "தினமலர்" நாளிதழில் "நிதியை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட உணவு" என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதையடுத்து, கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஏ., மாநில அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
கோவை மாவட்டத்தில் (திருப்பூர் உள்ளடக்கம்)காரமடை, தொண்டாமுத்தூர், பேரூர் உள்ளிட்ட 18 இடங்களில் பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளாக மாவட்டத்தில் சுமார் 7000 பேர் உள்ளனர். இதில், 355 மாணவர்கள் டே- கேர் சென்டர் மூலம் பராமரிக்கப்படுகின்றனர்.
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "டே- கேர் சென்டர் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு முன்பு இருந்தது போல் ஆரோக்கிய உணவு வழங்குவது சார்ந்து மாநில திட்ட இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது," என்றார்.
எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா கூறுகையில், "வரும் 21ம் தேதி மாநில பட்ஜெட் கூட்டம் நடக்க உள்ளது. டே-கேர் சென்டர் மாணவர்களுக்கு வரும் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய அனைத்து மாவட்ட அதிகாரிகளும் கோரிக்கைவிடுக்க உள்ளோம்," என்றார்.

No comments:

Post a Comment