Tuesday, November 5, 2013

விருது பெற்ற நடுநிலைப் பள்ளி; மூடத்துடிக்கும் கல்வித் துறை

ஜி. தும்மலப்பட்டியில் பவள விழா கண்ட பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஜி. தும்மலப்பட்டியில் 1922 ஜூன் 26ல் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் ஆரம்பபள்ளி துவங்கப்பட்டது. 91 ஆண்டுகளான இப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து உள்ளது.

49 மாணவர்கள், 66 மாணவிகள் உட்பட 115 மாணவர்கள் உள்ளனர். கடந்த 2012ல் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் மாநில அளவில் சிறந்த சுற்றப்புற தூய்மை பள்ளி விருது பெற்றுள்ளது.
இப்பள்ளியின் கணித ஆசிரியர் பணியிடம் 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இரண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளது. ஒரு இடத்திற்கு அயல் பணி ஆசிரியர் வந்து செல்கிறார்.
2008லிருந்து முழு நேர தலைமை ஆசிரியராக பணியாற்றியவரை கடந்த ஆண்டு முதல் பொறுப்பு தலைமை ஆசிரியராக கள்ளர் சீரமைப்புத் துறை நியமித்து விட்டது. தலைமை ஆசிரியரும் இரண்டு பள்ளிகளை கவனித்து வருவதால் பாதி நாட்கள் பள்ளிக்கு வர முடிவதில்லை. இதனால் இக்கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை 45ஆக குறைந்து விட்டது. மேலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கித் தரும்படி ஊராட்சி தலைவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, செம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் வெளியூர் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை உள்ளூரிலேயே படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது கள்ளர் சீரமைப்பு துறையில் புதிய ஆசிரியர்கள் நியமனம், கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பவள விழா கண்ட பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக்கும் வகையில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இது குறித்து ஊராட்சி தலைவர் உதயகுமார் கூறுகையில், "கிராமத்தினர் மூன்று முறை மாவட்ட கலெக்டரை சந்தித்து பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்க மனுக் கொடுத்து விட்டோம். ஒரு பலனும் இல்லை. பள்ளியை மூடுவதற்குத் தான் கல்வித்துறையினர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர் என்று தோன்றுகிறது" என்றார்.

No comments:

Post a Comment