Wednesday, November 13, 2013

பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை

ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 395 யூனியன்களில் 37 ஆயிரம் துவக்கப்பள்ளிகள், 9,438 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கின்றனர்.
மாணவர்களின் முழுவிபரங்களை அறிந்து கொள்ள வசதியாக, பெயர், பெற்றோர் விபரம், வகுப்பு, பிறந்த தேதி, ரத்தவகை, உடல் தகுதி, எடை, உயரம், முகவரி, பெற்றோர், பாதுகாவலர் மொபைல் எண் விபரங்களை அந்தந்த பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என, மாநில தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
அதேபோல், படிவம் தயாரித்து முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் பள்ளி மேலாண் தொகுப்பு படிவம், ஃபோட்டோ இல்லாமல் பதிவு செய்ய அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மூலம் மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான காலம் கடந்த 8ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், மாணவர்களின் ஃபோட்டோவுடன் பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் மாணவர்களின் முழு விபரங்களை உடனடியாக அறியவும் மாணவரின் பள்ளியில் படிக்கும் விபரம் மற்றும் இடைநிற்றல் விபரம் 100 சதவீதம் தெளிவாக அறியவும் உதவுகிறது.
அதேபோல் ஒரு மாணவரின் பெயர் இரண்டு பள்ளியில் இருக்க முடியாது. மேலும், மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கலாம். அரசின் நலத்திட்டம், மாணவர்களுக்கு 100 சதவீதம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
இந்த முறையில், அனைத்து விபரங்களும் பதிவு செய்வதால், விலையில்லா திட்டங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு வசதியாக இருக்கும். மேலும், மாணவர்களுக்கு தனித்தனி அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் ஃபோட்டோ எடுக்கும் பள்ளி அந்தந்த பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.
அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களிடமே வசூல் செய்ய ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல் பருவத்தேர்வுக்கு மாணவர்களிடம் வசூல் செய்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஃபோட்டோ எடுப்பதற்கு 15 முதல் 20 ரூபாய் வரை செலவாகும். அதை மாணவர் தலையில் கட்டக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி எருமப்பட்டி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியதாவது: "ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் தயாரிப்பதற்காக அந்தந்தப்பள்ளியில் மாணவர்களின் ஃபோட்டோ எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதற்குரிய தொகையை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியில் இருந்து செலவு செய்ய கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment