Friday, January 9, 2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2.02 லட்சம் பேர் பங்கேற்பு

நாளை(ஜனவரி 10) நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.

இந்நிலையில், தேர்வு குறித்து டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 32 மாவட்டங்களில், 499 மையங்களில் நடக்கிறது. இதில், 2.02 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும், 34 மையங்களில் 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை நடத்தும் மண்டல அதிகாரிகளாக செயல்படுவர்.
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 மாவட்டங்களுக்கும் தேர்வு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, போதுமான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தரை தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற தேர்வர்களுக்கு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment