Thursday, January 8, 2015

இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?

பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு, ஆலோசித்து வருகிறது.

அரசு மாணவர்களின் நலன் மற்றும் கல்வித்தரம் மேம்படுத்தும் நோக்கில், 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும், 2,557 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு நான்கு செட் இலவச சீருடை வினியோகிக்கபடுகிறது. இதற்கு, 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. 
தமிழகத்தில், 36 ஆயிரத்து 505 அரசு தொடக்க, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 8,266 அரசு உதவிபெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் சத்துணவு திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 40 லட்சம் மாணவர்கள் மட்டுமே, மதிய உணவு மற்றும் நான்கு செட் சீருடை போன்ற பலனை பெறுகின்றனர்.
பொதுவாக அரசு பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே, படிக்கின்றனர். இலவச சீருடை மற்றும் மதிய உணவு ஆகிய பலன்கள் கிடைக்காமல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, சில கிராம பகுதிகளிலும், மலை கிராம பகுதிகளிலும் இடைநிற்றல் ஏற்படுகிறது.இலவச சீருடை, மதிய உணவு திட்டத்தை பிளஸ்2 வகுப்பு வரை விரிவுபடுத்தவேண்டும் என, பல்வேறு கல்வி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது, அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்தும், நிதி அதிகரிப்பு குறித்தும் ஆலோசித்து வருவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், ’அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பொருளாதார சூழல், மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டுகளில், இலவச சீருடை வினியோகம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த, ஆலோசனையில் அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment