Saturday, January 10, 2015

தொலைநோக்குத் திட்ட இலக்கை 5 ஆண்டுகளில் கல்வித் துறை எட்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி

நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மலர உருவாக்கப்பட்ட 2,023 தொலைநோக்குத் திட்ட இலக்கை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பள்ளிக் கல்வித் துறை எட்டிவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை தெரிவித்தார்.
 வேலூரை அடுத்த மெட்டுக்குளத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசியது:


தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு திட்டங்களை தீட்டினார். குறிப்பாக கல்வியில் தமிழகம் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 65 ஆயிரம் கோடியை பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்தார்.

தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மலர உருவாக்கப்பட்ட 2,023 தொலைநோக்குத் திட்ட இலக்கை பள்ளிக் கல்வித் துறை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் எட்டிவிடும்.

கடந்த ஆண்டில் 10ஆம் வகுப்பில் 883 அரசுப் பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 113 அரசுப் பள்ளிகளும் 100 சதவீதத் தேர்ச்சி அடைந்தது பெருமைக்குரியது என்றார் அமைச்சர்.

பள்ளிகள் தரம் உயர்வு: இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசியது:

தமிழகத்தில் இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.  178 கிராமங்களில் கூடுதலாக தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பட்டதாரி ஆசிரியர்கள் 15,500 பேரும், முதுகலை ஆசிரியர்கள் 2,500 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நபார்டு வங்கி மூலம் ரூ. 460 கோடி மதிப்பில் பள்ளிகளுக்குத் தேவையான கட்டட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2015-16ஆம் கல்வியாண்டில் கழிப்பறை இல்லாத பள்ளிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார் கண்ணப்பன்.

 மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டியில் முதலிடம் பெற்ற கோவை கல்வி மாவட்ட அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்குகிறார் அமைச்சர் கே.சி.வீரமணி

No comments:

Post a Comment