Thursday, January 29, 2015

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் என, பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு திட்டங்களிலும் சேர்த்து, இப்பயற்சிக்காக, ஆண்டுதோறும், பல கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 90 லட்சம் ரூபாயும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ் 96 லட்சம் ரூபாயும் ஆசிரியர் பயிற்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு பயிற்சிகளுக்கு 35 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டது.
இப்பயிற்சிகள், மாநில, மாவட்டம், வட்டாரம், பள்ளிகள் என்ற பிரிவுகளின் கீழ் கலை ஆசிரியர்கள் உட்பட பாடவாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரே விதமாக நடத்தப்படுகிறது. ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் இல்லாததால், ஒதுக்கப்படும் நிதி பயனின்றி செலவிடப்படுகிறது.
ஆசிரியர்கள் கூறுகையில், "பயிற்சிகளில், ஆசிரியர் ஒருவருக்கு பயணம் உள்ளிட்ட இதர படிகளுக்கு, 300 முதல் 500 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், பாடபுத்தகங்களில் உள்ளவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சிகள் என்பது ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பதில்லை. ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் அவசியம். இல்லையேல், இந்நிதியை ரத்து செய்துவிடலாம்" என்றனர்.

No comments:

Post a Comment