Tuesday, January 6, 2015

டி.ஆர்.பி. தேர்வில் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய ஏற்பாடுகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேட்டை தடுக்க, விடைத்தாள் கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், சீல் வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது.

டி.ஆர்.பி., அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும் 10ம் தேதி, மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வை நடத்துகிறது.
சில லட்சம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு நடைமுறைகளில், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அவ்வப்போது சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்து வருகிறது.
அதன்படி இந்த தேர்வில், தேர்வு அறையில், மொத்தமாக சேகரிக்கப்படும் விடைத்தாள்களை ஒரு உறையில் போட்டு, தேர்வர் முன்னிலையில் அதை சீல் வைக்கவும், இதுதொடர்பாக, இரு தேர்வர்களிடம் கையெழுத்து பெறும் நடைமுறையையும் அமல்படுத்துகிறது.
இதுகுறித்து, மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (ஆப்டிக்கல் மார்க் ரீடர்), தேர்வர், தன்னுடைய பதிவு எண்ணை, ஷேட் செய்யும் முறை இருந்தது. தற்போது, விடைத்தாளில், தேர்வர் பெயர், புகைப்படம், பதிவு எண், பாடம் உட்பட, அனைத்து தகவல்களும், ஏற்கனவே அச்சிடப்பட்டு இருக்கும்.
தேர்வர்கள், கையெழுத்து மட்டும் போட வேண்டும்; அவ்வளவு தான். கடந்த காலங்களில், ஒரு தேர்வு அறையில் இருந்து பெறப்படும் விடைத்தாள்களை, அந்த அறை கண்காணிப்பாளர், தேர்வு மையத்திற்கு எடுத்துச் சென்று, அதன்பின், சீல் வைப்பார்.
தற்போது, தேர்வு அறையில், தேர்வர் முன், விடைத்தாள்கள் அடங்கிய உறையை சீல் வைத்து, அதற்கு சாட்சியாக, இரு தேர்வர்களிடம் கையெழுத்து வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை மூலம், பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்த முடியும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலி பணியிடங்கள் விபரம்
தமிழ்  -  277
ஆங்கிலம்  -  209
கணிதம்  -  222
இயற்பியல்  -  189
வேதியியல்  -  189
தாவரவியல்  -  95
விலங்கியல்  -  89
வரலாறு  -  198
பொருளியல்  -  177
வணிகவியல்  -  135
உடற்கல்வி
இயக்குனர் நிலை  -  127
மொத்தம்  -  1,807

No comments:

Post a Comment