Friday, May 16, 2014

80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம்

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவு வெளியிடப்பட்டதை அடுத்து, விடைத்தாள் நகல் கேட்டு அந்தந்த பள்ளி மூலமாகவே ஆன் - லைனில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு அதிகபட்சம் 40 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். நடப்பாண்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
பொதுவாக, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் மட்டுமே நகல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் இம்முறை 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களில் பலரும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற விடைத்தாளை மாணவர்கள் பத்திரப்படுத் தும் நோக்கில் இதுபோல் பலரும் விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: இம்முறை நகல் கேட்டு விண்ணப்பிப்பது முழுக்க ஆன் - லைன் மூலமாகவே நடந்துள்ளது. முன்பெல்லாம் கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சென்னையில் தொகுத்து தேவைப்படும் விடைத்தாள் கேட்டு, பட்டியல் தயாரித்து பின் அதை தேடியெடுத்து அனுப்புவதற்கு பல நாட்களாகி விடும். தற்போது மாணவர்கள் விண்ணப்பிக்கும் கெடு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத்துக்கான விடைத்தாள் பட்டியல் கேட்கும் கடிதம் உடனடியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வந்துவிட்டது.
அவர்களும் உடனடியாக தனிக்குழு நியமித்து அந்த விடைத்தாள்களை சேகரிக்கும் பணியை செய்து வருகின்றனர். அதிகமானோர் விண்ணப்பித்திருந்தாலும் விரைவாகவே மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment