Wednesday, May 14, 2014

தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளியிடவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியல் வைக்க வேண்டும்" என, சேலம் மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த, 2001ம் ஆண்டு தனியார் பள்ளிகள் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிப்பதாக, பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவினர் ஒவ்வொரு பள்ளி வாரியாக சென்று ஆய்வு நடத்தினர். பள்ளிகளின் தரம், தன்மைக்கு ஏற்ப, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த குழுவினர் வெளியிட்டனர். ஆனால், அதை தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் கடைபிடிக்கவில்லை.
சேலம் மாவட்டத்தில் உள்ள 361 தனியார் நர்ஸரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு நிர்ணயம் செய்த கட்டண பட்டியல் வைக்கவில்லை என, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஆத்தூரை சேர்ந்த, சமூக ஆர்வலர் சிவசுப்ரமணியம், சேலம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.
நேற்று, சேலம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி மணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் ஆஜராகினர். அவர்கள், 361 தனியார் பள்ளிகளில் 2013-14, 2014-15 மற்றும் 2015 -16ம் ஆண்டுக்கான அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் விபரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ள 2013ம் ஆண்டு முதல் 2016 வரை கட்டண விபரங்கள் tn.gov.in/miscellaneous/fees.html என்ற தமிழக அரசின் இணையதளத்தில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி முகவரியுடன் கட்டண விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது குறித்து புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதியிடம், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன் உறுதியளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணி, "அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரங்களை, அந்தந்த பள்ளி அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, உத்தரவிட்டு, வழக்கை பைசல் செய்தார்.
அறிவுறுத்தல்
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் 352 தனியார் பள்ளிகளின் கட்டண விபரம் அடங்கிய பட்டியல் எங்களிடம் உள்ளது. அந்த பட்டியல் கிடைக்கவில்லை என ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். நீதிமன்றமும், அதை ஏற்றுக்கொண்டு வழக்கை பைசல் செய்தது. அரசு வகுத்துள்ள கட்டண நிர்ணயத்தை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment