Wednesday, May 14, 2014

பள்ளி வாகனங்களில் செயல்படாத தீயணைப்பு கருவிகள்: மாணவர்கள் அதிர்ச்சி

பள்ளி வாகனங்களில் நடத்தப்பட்ட தகுதி சான்றிதழ் சோதனையில், தீ விபத்தை தடுக்க வைத்திருந்த கருவிகளில் தீயணைக்கும் புகை கலவை இன்றி வெறும் கருவி மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 சென்னை கொளத்தூர், தாதங்குப்பம் 200 அடி சாலையில் அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், வில்லிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களுக்கான அரசு விதிமுறை தகுதிச்சான்று சோதனை நேற்று காலை நடந்தது. அண்ணா நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நடந்த சோதனையில் 39 வாகனங்களுக்கு தகுதிச்சான்று சோதிக்கப்பட்டது. அதில், அவசரவழி கதவு சரியாக இயங்காத, படிக்கட்டுகள் சேதமடைந்த, கண்ணாடிகள் உடைந்தது உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட, 11 வாகனங்கள் சிக்கின.
குறிப்பாக திடீர் தீ விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் கையடக்க தீயணைப்பு கருவியில் உரிய புகை கலவை இன்றி "புஸ்" என வெறும் காற்றுதான் வந்தது. அதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் ஓட்டுனர்களை எச்சரித்து, 11 வாகனங்களின் தகுதி சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் மொத்தம் 102 பள்ளி வாகனங்களில் நேற்று மட்டும் 39 வாகனங்கள் சோதிக்கப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான சோதனை 10 நாட்களுக்கு பின் நடக்கும் என, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment