Wednesday, May 7, 2014

"வெயிட்டேஜ்" மதிப்பெண் குளறுபடி: அரசுக் கல்லூரி பட்டதாரிகள் பாதிப்பு

ஆசிரியர் பணி தேர்வுக்கான "வெயிட்டேஜ்" மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு ஏற்கனவே கடைப்பிடித்து வந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது.
10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட். சான்றுகள் அடிப்படையில் "வெயிட்டேஜ்" மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால் "வெயிட்டேஜ்" மதிப்பெண் அதிகரிக்கிறது.
ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது.
அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், "என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக் கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.ஆர்.பி. உத்தரவுப்படி தான் "வெயிட்டேஜ்" மதிப்பெண் கணக்கிடுகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment