Friday, May 2, 2014

முடிந்தன வழக்குகள் - இனி அனைத்தும் கல்வித்துறையின் கையில்...

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இனி அடுத்தகட்ட பணிகள் கல்வித்துறையின் கைகளில்தான் உள்ளன.

உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை கல்வித்துறை செய்ய வேண்டும்.
டி.இ.டி. தேர்வில் கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக டி.இ.டி. தேர்வு விவகாரம் இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும் நேற்று முன்தினம் நீதிபதி நாகமுத்து முடித்து வைத்தார்.
டி.இ.டி. தேர்வு மதிப்பெண் 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு 40 மதிப்பெண்ணும், வெயிட்டேஜ் அடிப்படையில் வழங்கப்படுகிறது. "இந்த முறை அறிவியல் பூர்வமானது அல்ல. இது தேர்வர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசு கொண்டுவந்த இந்த கிரேடு முறை தன்னிச்சையானது; பாரபட்சமானது" என நீதிபதி நாகமுத்து தெரிவித்துள்ளார்.
இனி கல்வித்துறை கையில்...
மேலும் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அறிவியல் பூர்வமான முறையை கொண்டுவர, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, டி.இ.டி. தேர்வு மற்றும் தேர்வர்களின் பிற கல்வி தகுதி மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அறிவியல் பூர்வமான புதிய முறையை கல்வித்துறை வகுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு பட்டியல் மாறுகிறது
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அதே தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தமிழக அரசு அளித்த 5 சதவீத மதிப்பெண் சலுகையினால் கூடுதலாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் என, மொத்தத்தில் 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேருக்கு, ஏற்கனவே பல கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. முடித்துவிட்டது.
இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) 22 ஆயிரம் பேருக்கு மட்டும், இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டி உள்ளது. இந்த பணி விரைவில் நடக்க உள்ளது. முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கும் கிரேடு முறையில் மதிப்பெண் அளித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தேர்வுக்கு புதிய முறையை தமிழக அரசு உருவாக்க உள்ளது.
எனவே, புதிய தேர்வு முறையின் அடிப்படையில், 72 ஆயிரம் பேருக்கும் மதிப்பெண் அளித்து அதனடிப்படையில், இறுதி தேர்வு பட்டியலை தயாரிக்க வேண்டிய நிலைக்கு டி.ஆர்.பி. தள்ளப்பட்டு உள்ளது. இதனால் மேலும் காலதாமதம் ஏற்படலாம்.
டி.ஆர்.பி. கருத்து
இதுகுறித்து டி.ஆர்.பி. வட்டாரம் கூறுகையில், "தேர்வர்களுடைய மதிப்பெண் விவரம் கம்ப்யூட்டரில் உள்ளது. புதிய தேர்வு முறையை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டால் அதனடிப்படையில் மிக விரைவாக மதிப்பெண் அளித்து இறுதி பட்டியலை தயாரித்து விடுவோம்" என தெரிவித்தது.
சான்றிதழ் சரிபார்ப்பில் மதிப்பெண் கிடையாது
ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, மே 6 முதல் 12ம் தேதி வரை 28 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த முகாமில் ஏற்கனவே உள்ள கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்க சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்களுக்கு, டி.ஆர்.பி. உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தற்போது கிரேடு முறையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம் என டி.ஆர்.பி. அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment