பள்ளி மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கமானது வகுப்பறையிலேயே சக
மாணவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை தடம்மாறி செல்லத்
தொடங்கியுள்ளது.
இது ஆசிரியர்கள், பெற்றோர்களை கவலையடையச் செய்துள்ளது.
பொதுவாக போதைப்
பொருட்களை உபயோகிப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வது எளிது. ஆனால் தற்போது
பிரபலமாகிவரும் சில போதைப் பொருட்கள், நிழல் உலக தாதாக்கள்போல. இவை
வெளியில் தெரிவதில்லை, கண்டுபிடிப்பதும் கடினம்.
ஆனால் இவை இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களையும் மாணவர்களையும் கிருமிபோல்
ஊடுருவிக்கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால்,
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் சக மாணவரைக் கொலை செய்யும் அளவுக்கு
இன்று மாணவர்களுடைய வளர் இளம் பருவம் திசைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடரும் வகுப்பறை கொலைகள்
எட்டு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் தனியார் பள்ளி விடுதியில் ஓரினச்
சேர்க்கைக்கு மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர், 6-ம் வகுப்பு மாணவரான
ஹரிபிரசாத்தை செப்டிக் டேங்கில் தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. கடந்த
மாதம் திண்டுக்கல் அருகே விளாம்பட்டியில் வகுப்பறையிலேயே பிளஸ் 1 மாணவர்
வினோத் சக மாணவரால் அடித்துக் கொல்லப்பட்டார். இரு வாரங்களுக்கு முன்,
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்
பாஸ்கர் வகுப்பறையிலேயே சக மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளிக்கு மதுபோதையில் வந்த
பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒயிட்னர்
எனப்படும் போதைப் பொருள் சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள்
பிடித்தனர். இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல சம்பவங்கள் அங்கொன்றும்,
இங்கொன்றுமாக தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் அவர்களைக்
கண்டிக்க முடியாமலும், நல்வழிப்படுத்த கல்வித்துறை வழிகாட்டுதல் இல்லாமலும்
தடுமாறிப்போய் உள்ளனர்.
வகுப்பறையிலேயே போதைப் பழக்கம்
இதுகுறித்து திருநெல்வேலி மனநல நிபுணர் ஆ.காட்சன் ‘தி இந்து’விடம் கூறியது:
சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களிடையே, ஆபாச வலைதளங்கள், மதுவுடன்
பிரபலமாகிவரும் மற்றொரு போதைப் பழக்கம், டொலூயின், பெட்ரோலியக்
கழிவுகளிலிருந்து பெறப்படும் வேதியியல் பொருட்கள், உதாரணமாக ஒயிட்னர்,
சைக்கிள் டியூப்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் பசை, நெயில் பாலிஷ்
நீக்க பயன்படுத்தப்படும் திரவம், மைக்கா மற்றும் மரத்துண்டுகளை ஒட்ட
பயன்படுத்தப்படும் பசைகள், பெயின்ட்களோடு கலக்கப்படும் தின்னர் என்ற திரவம்
போன்றவையாகும்.
இந்த திரவங்களை துணிகள், பாலிதீன் கவர்களில் வைத்து வாசனையை உறிஞ்சும்போது
ஒருவித போதை மயக்கம் ஏற்படும். மேலும் இந்த வகை பொருட்கள் எளிதில்
கிடைப்பதா லும், அன்றாட வாழ்வில் உபயோகிக் கப்படுவதாலும் இதை வைத்திருக்
கும் மாணவர்களை யாரும் எளிதில் சந்தேகப்படுவதில்லை.
ஒயிட்னரால் பாதிப்புகள்
இந்த திரவங்களை சுவாசத்தில் இழுக்கும்போது சாதாரண எரிச்சல் முதல்
மூச்சடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் வரை நிகழலாம். தொடர்ந்து
உபயோகிப்பதனால் வலிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இதயம்
செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும், ஞாபகமறதி, யாரோ பேசுவது போன்ற மாயக்குரல்
கேட்பது, மனக்குழப்பம், திடீர் ஆக்ரோஷம், பிறரை காரணமில்லாமல் தாக்குவது
போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும்.
மொத்தத்தில் மாணவரின் பள்ளி செயல்திறனில் குறைபாடுகள் ஏற்பட்டு படிப்பில்
பின்தங்கும் நிலை ஏற்படும். பள்ளிகளில் இது பிரபலமாகி வருவதால் ஆசிரியர்கள்
இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கண்டிப்பதால் மட்டுமே
அவர்களை நல்வழிப்படுத்திவிட முடியாது.
கல்வித் துறை, ஆசிரியர், பெற்றோரிடையே மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான
ஒத்திசைவு, ஒத்துழைப்புக் கொள்கை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போதை திரவங்களை சுவாசத்தில் இழுக்கும்போது சாதாரண எரிச்சல் முதல்
மூச்சடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் வரை நிகழலாம். தொடர்ந்து
உபயோகிப்பதனால் வலிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இதயம்
செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும், திடீர் ஆக்ரோஷம், பிறரை காரணம் இல்லாமல்
தாக்குவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
No comments:
Post a Comment