Sunday, October 6, 2013

கோவையில் எப்போது யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு மையம்?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, பல முக்கிய பதவிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகளை எழுத, சமீப காலமாக இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கோவையிலும் ஆண்டுதோறும், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிவில் சர்வீஸ் போட்டி தேர்வை எழுதுகின்றனர். கோவையில், யு.பி.எஸ்.சி.,க்கு என, தேர்வு மையம் இல்லாததால், இவர்கள் தேர்வு எழுத சென்னை, மதுரை, பெங்களூரு, கொச்சின் போன்ற பகுதிகளிலுள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கோவையில் சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகளை எழுத, முதல் நிலை தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்ற தேர்வு எழுதுவோரின், நீண்டகால கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
கோவை பாரதியார் பல்கலையின், துணைவேந்தராக திருவாசகம் பணியாற்றிய போதும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பணியாற்றிய போதும், கோவையில் யு.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளை எழுத, முதல்நிலை தேர்வு மையம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனாலும், கோவையில் முதல்நிலை தேர்வு மையம் அமைக்கப்படுவது தாமதமாகி வருவதாக மாணவர்கள், தேர்வாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த ஓராண்டிற்கு முன் கோவைக்கு வந்த போது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, கோவையில் உடனடியாக யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு மையம் அமைக்கப்படும், என்றார். கடந்த சில தினங்களுக்கு முன், கோவை வந்த போதும், அமைச்சர் நாராயணசாமி, கோவையில், யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு மையம் அமைப்பது குறித்து, இதே கருத்தை தான் தெரிவித்தார்.
இலவச சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு பயிற்சியாளரும், கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியருமான கனகராஜ் கூறுகையில், "தமிழகத்தில் சென்னை, மதுரையில் மட்டும் தான் யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு மையம் உள்ளது. கோவையில் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும், பலனில்லை. கோவையில் முதல்நிலை தேர்வு மையம் அமைத்ததால், மேற்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின், சில மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தேர்வு எழுதும் வாய்ப்பு ஏற்படும். இதனால், தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment