Wednesday, October 16, 2013

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.
வெளிநாடு செல்பவர்களுக்கு, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழகத்தில், 1953ம் ஆண்டு, சென்னை, சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் துவங்கப்பட்டது.

இந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தினால், போலீஸ் விசாரணை முடிந்து, பாஸ்போர்ட் வழங்கப்படும். பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பணிகளை விரைந்து முடிக்க வசதியாக, 1983ம் ஆண்டு திருச்சியில், 2007ல் மதுரையில், 2008ல் கோவையில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
சென்னை மாநகர், சென்னை புறநகர், கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, புதுச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்தன. அரியலூர், கரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்கள், திருச்சி மண்டலத்திலும்; திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, மதுரை புறநகர், ராமநாதபுரம், சிவசங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருநெல்வேலி புறநகர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், மதுரை மண்டலத்திலும்; கோவை, கோவை புறநகர், ஈரோடு, நாமக்கல், சேலம், சேலம் புறநகர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோவை மண்டல கட்டுப்பாட்டிலும் இயங்கின.
பாஸ்போர்ட் பெறுபவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கட்டுப்பாட்டில், பாஸ்போர்ட் மையங்கள் துவங்கப்பட்டன. இந்த அலுவலகத்தில், துணை தாசில்தார் அந்தஸ்தில் அலுவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை சரிபார்த்து, அதற்குரிய கட்டணங்களைப் பெற்று, மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், நாட்டின் பாதுகாப்புக் கருதி பாஸ்போர்ட் வழங்குதில், புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்தியது. இதற்காக, பாஸ்போர்ட் சேவகேந்திரா மையங்களை, ஆங்காங்கே துவங்கியது. அதில், தமிழகத்தில், சென்னை மண்டலத்தில் சாலிகிராமம், தாம்பரம், அமைந்தக்கரை; மதுரை மண்டலத்தில், மதுரை, திருநெல்வேலி; திருச்சி மண்டலத்தில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், பாஸ்போர்ட் சேவகேந்திரா துவங்கப்பட்டுள்ளது. இங்கு, &'ஆன்-லைன்&' வசதி மற்றும், &'பயோ மெட்ரிக்&' பதிவு செய்யும் வசதி உள்ளது.
அதையொட்டி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில், புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் இயங்கி வந்த பாஸ்போர்ட் மையங்களில், விண்ணப்பம் வாங்குவதை, வரும் 21ம் தேதியோடு நிறுத்திக் கொள்ளுமாறும், அதன்பிறகு, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் விண்ணப்பங்களை மட்டும் வாங்கி, மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன், உத்தரவிட்டுள்ளார்.
இதனால், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் எடுக்க, இனி, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவகேந்திராவிற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment