Wednesday, February 26, 2014

10ம் வகுப்பு செய்முறை தேர்வு கடைசி நேரத்தில் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர்.

இதன்மூலம், பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே, குளறுபடி கணக்கை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும், அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு 25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக செய்முறை தேர்வு குறித்த அறிவிப்பை 2 வாரங்களுக்கு முன்பே, தேர்வுத்துறை வெளியிடுவது வழக்கம். அப்போது தான், மனதளவில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவர். கடைசி நேரத்தில், தேர்வு தேதியை அறிவித்தால் மாணவர் மத்தியில், பதற்றம் தான் ஏற்படும்.

இதை அறிந்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அறிவிப்பை, தேர்வுக்கு முதல் நாள், தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளட்ட பல மாவட்டங்களில் நேற்று, செய்முறை தேர்வு துவங்கியது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை, நேற்று முன்தினம் தான் மாணவர்களுக்கு, ஆசிரியர் தெரிவித்தனர்.
"நாளைக்கு செய்முறை தேர்வு" என ஆசிரியர் கூறியதை கேட்டதும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களுக்கான பதிவு எண்களும், நேற்று முன்தினம் தான், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனால் அவசர அவசரமாக, பதிவு எண்களை, பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு அறிவித்து உள்ளனர். இதனால், செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை பதிவு செய்வதற்கான படிவத்தை முன்கூட்டியே இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமலும், ஆசிரியர்கள் தவித்தனர்.

No comments:

Post a Comment