Wednesday, February 26, 2014

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை: பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பி.எட்., கணினி பட்டதாரிகள்வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் இல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கின்றன.

அதே சமயம் தனியார் பள்ளிகளில், கணினி கல்விக்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனாலும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். எனவே அரசு பள்ளிகளிலும், கல்வித்தரம் உயர கணினி பாடப்பிரிவு துவங்கி, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, "ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடப்பிரிவு துவங்கப்படும்" என தமிழக அரசு அறிவித்தது; ஆனால், செயல்படுத்தவில்லை. இதனால் கணினி துறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஈடுபாடு காட்டுவதில்லை. கணினி பாடப் பிரிவில், பி.எட்., முடித்த பட்டதாரிகளும், வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
பி.எட்., கணினி பட்டதாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் கணினி பட்டதாரிகள், வேலைக்காக காத்திருக்கிறோம். அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. ஆனால் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை கணினிக்கு என, தனியாக பாடப்பிரிவு இல்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment