Tuesday, February 4, 2014

பள்ளிகளில் மாணவர்களே துப்புரவு: பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவ, மாணவியரே, துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற பயத்தில், இது குறித்து, ஆசிரியர்களிடம் முறையிடுவதற்கு தயங்கி வருகின்றனர்.

மாவட்டத்தில், 1,386 அரசு பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு துப்புரவு பணியாளர் இருக்க வேண்டும். ஆனால், இந்த பணியிடங்கள் சரிவர நிரப்பப்படாததால், தற்போது, ஏறத்தாழ 850 பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. புகார் இதனால், பள்ளி வளாகத்தில் சேரும் குப்பை மற்றும் கழிவறைகளை மாணவ, மாணவியரே சுத்தம் செய்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. பெற்றோரும் இது குறித்து, பள்ளியில் முறையிட அஞ்சுகின்றனர். காலி பணியிடங்களை, அரசு, விரைவில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்கள் குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியரை துப்புரவு பணி மற்றும் கழிப்பறை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment