Wednesday, February 12, 2014

அரசாணையால் கல்வி கட்டணம் அதிகரிப்பு: ஆதிதிராவிட மாணவர் தவிப்பு

ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், இலவச கல்வி திட்டத்தில், திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கல்வித் தொகை முழுமையாக கிடைக்காமல் 15 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.

இத்துறை சார்பில் இரண்டு ஆண்டுக்கு முன், இலவச கல்வி குறித்த அரசாணை வெளியானது. அதன்படி, கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் பயிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படும்; நூலகம், பயிற்சி, மாணவர் சங்கம் உள்ளிட்ட எந்த கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலான மாணவர்கள், அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பையை தேர்வு செய்துள்ளனர்.
ஒரு மாணவருக்கு, ஆண்டுக்கு, 70 ஆயிரம் ரூபாய் கல்வித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் புதிய அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. அதன்படி, "நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேரும், பொறியியல், அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இனி 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வழங்கப்படும். இந்த மாதத்தில் இருந்து அரசாணை அமலுக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, கல்லூரி நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் 15 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இலவச கல்விக்காக, ஆண்டுதோறும், 850 கோடி ரூபாய் தேவை. ஆனால், கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் முறையாக கிடைக்கும் என்று நினைத்த மாணவ, மாணவியர் கட்டணச் சுமையில் சிக்கி விட்டனர்.
இத்துடன் கடந்த கல்வியாண்டுக்கான மாணவர் கட்டணத்தை இதுவரை கல்லூரி நிர்வாகங்களுக்கு அரசு செலுத்தவில்லை. சில கல்லூரிகளில், தேர்வு கட்டணம் கட்டிய பிறகே மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தனர்; இதுதொடர்பாக, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்களுக்கு, மாணவர்கள் பலமுறை புகார் மனு அனுப்பியும் பலன் இல்லை.
புதிய அரசாணையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், "பழைய அரசாணை முறையில், இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment