Sunday, February 23, 2014

தரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அவதி

: ராமநாதபுரம் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதியின்றி, இட நெருக்கடியால் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.

நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக மாநில பள்ளி கல்வித்துறை தரம் உயர்த்துகிறது. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 10 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 4 வகுப்பறை, தலா ஒரு கலை மற்றும் கைத்தொழில் பிரிவு, அலுவலகம், அறிவியல் பரிசோதனை கூடம், நூலகம், கம்ப்யூட்டர் அறை, மாணவர், மாணவியர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட வேண்டும்.
இதில் வளர்ந்த மாநிலங்களில் 75:25 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப்பு செய்ய வேண்டும். கூடுதல் வகுப்பறைகளுக்கு ரூ.58 லட்சத்து 12 ஆயிரம் மத்திய மனித வள அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் முதல் தவணையாகவும், எஞ்சிய தொகை பெஞ்ச், சேர்கள் வாங்க இரண்டாம் தவணையில் இடைநிலைக்கல்வி திட்டம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களில் முறையே 93 மற்றும் 117 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 2009-10 கல்வி ஆண்டில் ஐந்து பள்ளிகள், 2010-11ல் நான்கு பள்ளிகள், 2011-12ல் 26 பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 2009-10ல் தரம் உயர்த்திய ஐந்து பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வினால், 2010-11, 2011-12 கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்திய 30 பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
இதனால் இப்பள்ளிகளில் இட நெருக்கடியில் மாணவர்கள் தவிக்கின்றனர். இடைநிலைக்கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் கூறுகையில், "தமிழக பள்ளிகளை இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி தரம் சிறப்பாக உள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இரு கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்திய 30 உயர்நிலைப்பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறை கட்ட மத்திய மனித வள அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment