Thursday, February 20, 2014

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை: டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது.
இது 2013ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைப்பட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு 83 மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்ச்சியடைந்து விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 2012ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment