Wednesday, February 26, 2014

"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம், பொதுத் தேர்வுப் பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அடுத்த கல்வியாண்டில் தான் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில், வகுப்புகளை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பிப்., 19ல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் முறையில், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மார்ச் 7ம் தேதி, பயிற்சி வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 160 வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு அம்மாணவர்களின் சந்தேகம் உள்ளிட்டவைகளை போக்கும் வகையில் நிபுணர்கள் மூலம் பாடம் நடத்தப்படும்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், "தற்போது, பிளஸ் 2, 10ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதால் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டத்தை, செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே இத்திட்டத்தை அடுத்த கல்வியாண்டில் தான் முழுமையாக செயல்படுத்த முடியும்" என்றனர்.

No comments:

Post a Comment