Wednesday, February 26, 2014

மாணவர்கள் முன்பு வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு: தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, "கவர்" செய்யப்பட்டு உள்ளதால் தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் முன்கூட்டியே வினாத்தாள், "அவுட்" ஆவதற்கு வாய்ப்பில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்வுத் துறையின் கிடுக்கிப்பிடியால், சில தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், வினாத்தாள்கள் வினியோகத்திலும், பல மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை, வினாத்தாள் கட்டுகளாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தேவையானவற்றை பிரித்து தனி கவரில் வைத்து தேர்வு நாளன்று, மையத்துக்கு வினியோகிக்கப்படும்.
தேர்வு நேரத்துக்கு, ஒரு மணி நேரம் முன்பே அந்த கவரை பிரித்து, ஒவ்வொரு தேர்வறைக்கும் தேவையான அளவு கவரில் வைத்து, தேர்வு மைய அலுவலர், அறை கண்காணிப்பாளரிடம் வழங்குவது வழக்கம். இதனால் சில தனியார் பள்ளிகளில், சற்று முன்னதாகவே வினாத்தாள்களை பிரித்து கடைசி நேரத்தில் மாணவர்களிடம், வெளியிடுவதாக புகார் எழுந்தது.

அப்பள்ளிகளுக்கு பறக்கும் படை உள்ளிட்டோர் கண்காணிக்க சென்றாலும், "வினாத்தாள்களை பிரித்து வினியோகிக்கவே, கவர் "சீல்" உடைக்கப்பட்டது" என காரணம் கூறி தப்பினர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் இப்புகார் எழாத வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தேர்வறையும், அதில்அமரக்கூடிய மாணவர்கள் விவரம் வரை அனைத்தும், இயக்குனரகமே முடிவு செய்துள்ளது. இதனால், ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் சரியான எண்ணிக்கையில் வினாத்தாள் வைக்கப்பட்டு, &'சீல்&'வைக்கப்பட்டு உள்ளது.

இக்கவர்கள் அனைத்தும், தனித்தனி பெட்டிகளாக்கப்பட்டு அவை கட்டுக்காப்பு மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டி, தேர்வு மையத்துக்கு, தேர்வு நாளன்று அனுப்பப்பட்டாலும் அதற்குள்ளும், தனித்தனி கவரில் வினாத்தாள்கள் &'சீல்&' வைக்கப்பட்டு உள்ளது.தேர்வு மைய அலுவலர், இக்கவர் மற்றும் பிளேடு ஒன்றையும், அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இக்கவர் தேர்வெழுதும் மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கிய பின் கவரை பிரித்து, வினாத்தாள்களை மாணவர்களிடம் வினியோகிக்கவும், தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தேர்வு நேரத்துக்கு முன் வினாத்தாள் கவர் &'சீல்&' உடைக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க, பறக்கும் படையினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், யாரும் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட முடியாது. இந்த நடவடிக்கையால் ஒரு சில தனியார் பள்ளிகளில், தேர்ச்சி விகிதம் சரியும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment