Wednesday, February 26, 2014

நாட்டின் பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி!

பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு, மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி தலைமைத்துவத்திற்கான பயிற்சியை, மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், நாடெங்கிலுமுள்ள 12 லட்சம் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவளத்துறை வட்டாரங்கள் கூறுவதாவது: இந்த திட்டத்தின் நோக்கம், கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் தனது தேசிய மையத்தின் மூலமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் போன்ற மாநில அளவிலான நிறுவனங்களின் மூலமாகவும் பயிற்சியளித்து பள்ளிகளை வலுப்படுத்துவதாகும்.
மேலும், பள்ளிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான அளவீடுகளையும், மத்திய மனிதவள அமைச்சகம் இறுதி செய்துள்ளது. பள்ளிகளைத் தரப்படுத்துவதின் முதல் படிதான், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கை. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் தனது நோக்கத்தை நிறைவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த முயற்சியில் பங்கு பெற்றன. பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது என்ற முடிவு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சிகளை நன்கு ஆய்வுசெய்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது இவ்வாறு சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment