Sunday, February 2, 2014

பணியிடம் நிரப்புவதில் தாமதம் ஏன்?: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

அரசு பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:

போட்டி என்பது இன்று உலகளவில் ஏற்பட்டுள்ளது. கல்வி கற்ற பின், நல்ல வேலையை பெற்றால் தான், நம்மை உயர்த்திக் கொள்ள முடியும். தற்போது, தனியார் நிறுவனங்களில், குறிப்பாக, "சாப்ட்வேர்" கம்பெனிகளில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. அங்கு பணிவாய்ப்பில் ஸ்திரத்தன்மை இல்லை.
ஆனால் அரசு பணியில் பொது மக்களுக்கு சேவையாற்றி, சமுதாயத்தை உயர்த்த முடியும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், 5,566 பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் பங்கேற்றனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், முடிவுகள் வெளியிடப்படும்.
பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒருவர் வெற்றி பெறுவதை, யாரும் தடுக்க முடியாது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், எழுத்துத் தேர்வு 87.75 சதவீதம், நேர்முகத் தேர்வுக்கு 12.25 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வை, நன்கு எழுதினாலே பயப்படத் தேவையில்லை. சில சமயங்களில் பணி நியமனம் தாமதமாவதாக குறை கூறுகின்றனர்.
விண்ணப்பங்களில் தேர்வர்களின் விவரங்கள் சரியாக இருந்தால், தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்கலாம். பெரும்பாலும், தேர்வர்களின் விவரங்கள் சரியாக இல்லாததே, தாமதத்திற்கு காரணமாகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment