Monday, March 3, 2014

41 கல்வியியல் கல்லூரிகளுக்கு "நாக்" அங்கீகாரம்

தமிழகத்தில் செயல்படும் 41 கல்வியியல் கல்லூரிகளுக்கு, "நாக்" குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் - "நாக்" செய்து வருகிறது.

பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படும் இந்த கவுன்சில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்தால், தங்கள் குழுவினரை அனுப்பி ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில், கல்வி நிறுவனத்திற்கு, "ஏ, பி" என, "கிரேடு" வழங்கப்படும். இந்த அங்கீகாரம் பெற்றால், கல்லூரிகள், பல்கலைக்கழங்களில், மாணவர்கள் சேர்க்கையும்; நிதி அதிகரிக்கும்.
எனவே அங்கீகாரம் பெற, அனைத்து கல்வி நிறுவனங்களும் முனைப்பு காட்டும். தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைகளில் 11ம், கல்லூரிகளில் 371ம், "நாக்" அங்கீகாரம் பெற்றுள்ளன. அங்கீகாரம் காலாவதியான கல்லூரிகள், மீண்டும் பெற விண்ணப்பித்து உள்ளன.
இதில் சென்னை மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைகளும் அடக்கம். சென்னை பல்கலையில் ஆய்வு செய்ய, இம்மாதம், 4,5,6 தேதிகளில், "நாக்" குழு வர உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் "நாக்" கவுன்சிலின் 66வது கூட்டம் நடந்தது. அதில், முதல் பிரிவில் 135; இரண்டாவது பிரிவில் 133; மூன்றாவது பிரிவில் 15 என 283 கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 கல்லூரிகள் அடங்கும்.
இக்கல்லூரிகளில் 41 கல்லூரிகள், பி.எட்., - எம்.எட்., மற்றும் கல்வியியல் டிப்ளமோ கல்லூரிகள். குறிப்பாக, முதல் பிரிவில் அங்கீகாரம் பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 44ல், 40 கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள்.

No comments:

Post a Comment