Monday, March 10, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.
மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 3ம் தேதி துவங்கியது; 25ம் தேதி முடிகிறது.
எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். இந்நிலையில், மொழிப்பாடங்களுக்கான விடைத் தாள் திருத்தும் பணிகள் வரும் 21ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 66 மையங்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி விமல் ஜோதி மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி பி.கே.டி மேல்நிலைப்பள்ளி உட்பட இரண்டு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன. மையங்களில் வசதிகளை மேம்படுத்துதல், முதன்மை தேர்வர்கள், கண்காணிப்பாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள், இன்று முதல் துவங்குகின்றன. "பார்கோடு ரீடர்" பயன்படுத்தி விடைத்தாளிலிருந்து மதிப்பெண்கள் ஸ்கேன் செய்து முதன் முறையாக பயன்படுத்தப்படுவதால் பதிவு செய்யப்படும் மதிப்பெண்கள் சார்ந்த பல்வேறு பிழைகள் தவிர்க்க இயலும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "கோவை கல்வி மாவட்டத்தில் என் தலைமையிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் சண்முக வடிவு தலைமையிலும் இப்பணிகள் நடக்கும். 21ம் தேதி மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 10 நாட்களுக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்படும். "பார்கோர்டு ரீடர்" பயன்படுத்துவதால் ஒவ்வொரு நாளும் ஆன்-லைன் முறையில் மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவுசெய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment