Saturday, March 15, 2014

கணித தேர்வில் ஒரு கேள்வி தவறு; 2 கேள்விகள் மிக கடினம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும் இருக்கும் என மாணவர் எதிர்பார்த்த நிலையில் 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள், அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி தவறாக கேட்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, தொழிற்கல்வி படிப்புகளில் சேர, அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெறும் மதிப்பெண், மிகவும் முக்கியம். இந்த பாடங்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான், தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது.
நேற்று மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. தேர்வை முடித்து, வெளியே வந்த மாணவர் முகத்தில், வழக்கமான மகிழ்ச்சி இல்லை. அரசு பள்ளியில் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவ, மாணவியரும், 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள், தங்களை திணறடித்து விட்டதாக, புலம்பினர்.
மேலும், பகுதி "பி"யில் 47வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு உள்ளது. இதனால், ஆறு மதிப்பெண் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். இதுகுறித்து, கணித ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
* பகுதி, "பி"யில், ஆறு மதிப்பெண் கேள்வி பகுதியில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இரு கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில், ஏதாவது ஒரு கேள்விக்கு, பதில் எழுத வேண்டும். இதில், நான்காவது பாடமான, "பகுமுறை வடிவியல்" பாடத்தில் இருந்து, ஒரு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
இந்த பாடத்தில், 100 கேள்விகள் இருக்கின்றன. இதனால் இந்த பாடத்தில், பெரும்பாலான மாணவர், கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும், கடந்த கால பொது தேர்வுகளில், இந்த பாடத்தில் இருந்து கேள்வி வந்தது கிடையாது. இந்நிலையில் இந்த பாடத்தில் இருந்து கேள்வியை கேட்டதால் விடை எழுத முடியாமல், மாணவர்கள் அவதிப்பட்டனர். இதற்கான மாற்று கேள்வியை, மூன்று, மூன்று மதிப்பெண்ணாக பிரித்து, வெவ்வேறு பாடங்களில் இருந்து, இரு கேள்விகளாக (சப் - டிவிஷன்) கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கும், அதிகமான மாணவர், விடை அளிக்கவில்லை. மிக நன்றாக படிக்ககூடிய மாணவர் கூட, மூன்று மதிப்பெண்ணுக்கான, ஒரு கேள்விக்கு மட்டும் விடை எழுதினர்.
* பகுதி - "சி"யில், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. "தனிநிலை கணக்கியல்" பாடத்தில் இருந்து ஒரு கேள்வியும், "வகை நுண் கணிதம்" பாடத்தில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்பட்டன. இரண்டில் ஒரு கேள்விக்கு, விடை அளிக்க வேண்டும். இந்த இரு கேள்விகளையுமே, மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை.
பகுதி, "பி"யில், 47வது கேள்வி, தவறாக, "பிரின்ட்" ஆகி உள்ளது. எண்கள், சரியான இடத்தில் அச்சாகவில்லை. இதனால், பொருள் மாறிவிட்டது. "து"ன் மடக்கை அடிமானம் "ஞு" என்பதற்கு பதில், ஞுன் அடுக்கு, துன் மடக்கை" என அச்சாகி உள்ளது. இந்த கேள்வி தவறு. எனவே, ஆறு மதிப்பெண்ணை, மாணவர்களுக்கு, வழங்குவது தான், முறையாக இருக்கும். இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பகுதி, "பி"யில் தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்விக்கு முழுமையாக, ஆறு மதிப்பெண் வழங்கப்படுமா என்பது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: என்ன நடந்தது என்பது குறித்து, பாட ஆசிரியர் குழுவிடம் கேட்கப்படும். இந்த பிரச்னை குறித்து விடை தயாரிக்கும் குழு (கீ - ஆன்சர்) தான், முடிவு எடுக்க வேண்டும். மேலும், மாணவர் தரப்பில் இருந்து கோரிக்கை வருகிறதா என்பதை பார்த்து, உரிய முடிவு எடுக்கப்படும்.
இந்த பகுதியில், 15 கேள்விகளை கொடுத்து, 10 கேள்விகளுக்கு, விடை எழுதச் சொல்கிறோம். எனவே, 15 கேள்வியில், ஒரு கேள்வி தவறு என்றால், அதை விட்டுவிட்டு, வேறு கேள்விக்கு விடை எழுதியிருக்கலாமே? எனினும், இந்த விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, தேவராஜன் கூறினார்.

No comments:

Post a Comment