Thursday, March 27, 2014

தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?

தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா" என மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர். மாவட்டங்களில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்துப் பணிகளையும், குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுகிற வேலையை, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செய்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், பணியை கவனித்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம், 10ம் வகுப்பு தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், ஏப்., 7 முதல், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்த உள்ளது. மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகள் இருந்தால் தான், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த முடியும் என டி.ஆர்.பி., கருதுகிறது. இதற்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, அதிகாரிகளை ஒதுக்கி தருமாறு, கல்வித்துறையிடம் கேட்டுள்ளது.
டி.ஆர்.பி., நடவடிக்கைக்கு, மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். "தேர்வுப் பணியை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில், கூடுதலாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணியையும் திணித்தால் எப்படி" எனவும், "தேர்வுப் பணிகள் முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும்" எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment