Monday, March 3, 2014

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு மவுசு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது பல லட்சம் ரூபாய் வரை ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்பதால் காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளிகளில் வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.
பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில் 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால் கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம் 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி அதன் பின் கிடைக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முன்னுரிமையில் பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த, "விலை"யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டாத பல பள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன.
அதேபோல் ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும் வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment