Friday, March 21, 2014

பிளஸ் 2 உயிரியல் தேர்வு எப்படி: மாணவர்கள் கருத்து

உயிரியல் பாடத்தில், 200 மதிப்பெண் பெறுவது கடினமே" என பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியை கருத்து தெரிவித்துள்ளனர்.
கே.அபிநயா (மாணவி, என்.எம்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்): உயிரியல் பாடத்தில், விலங்கியலில் 10, 3 மார்க் கேள்விகள் எளிதாக இருந்தது. ஐந்து மார்க் கேள்விகள் கட்டாய வினாக்கள் மட்டுமின்றி, எதிர்பாராத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது.

ஒரு மார்க் கேள்விகள், புக் பேக் வினா மட்டுமின்றி, பாடத்தின் உள் பகுதியிலிருந்தும் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளுக்கு விடையளிப்பது, சிரமமாகவே இருந்தது. தாவரவியல் பாடத்தில் அனைத்து கேள்விகளும், புளூபிரின்ட் படி கேட்கப்பட்டிருந்தது. கேள்விகளும் எளிதாகவே இருந்தது.
மணிமாறன் (மாணவர், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிவகாசி): உயிரியல் தேர்வில், தாவரவியல் பாடத்தில் வந்த கேள்விகள் எளிமையாக இருந்தன. கடந்த ஆண்டு பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், எதிர்பார்த்த கேள்விகளும் இருந்ததால், எளிமையாக இருந்தது. கேள்விகளில் குழப்பம் இல்லை. ஆனால், விலங்கியல் பாடத்தில், கேள்விகள் கொஞ்சம் கடுமையாக இருந்தது.
ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கான "இ" பிரிவில், எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை. மூன்று கேள்விகள் எழுத வேண்டியதில், ஒரு கேள்வி மட்டுமே எளிமையாக இருந்தது. மற்ற இரண்டு கேள்விகள், எதிர்பார்த்த கேள்வியாக இல்லை.
10 மதிப்பெண்களுக்கான "ஈ" பிரிவில், இரு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால், ஒரு கேள்வி மட்டும் எளிமையாக இருந்தது. ஒரு மார்க் கேள்விகளும் கடினமாக இருந்தது. சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு, விலங்கியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தது .
எம்.சாரதா (ஆசிரியை, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): புரிந்து படித்து இருந்தால் மட்டுமே, எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும். அந்த வகையில்தான் கேள்விகள் இருந்தன. அடிக்கடி கேட்பவை தவிர்த்து, புதிய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. மூன்று மற்றும் ஐந்து மார்க் கேள்விகள், ஒரு மார்க் கேள்விகளாக கேட்கப்பட்டு இருந்தன. தாவரவியல் கேள்விகள் எளிதாக இருந்தன. விலங்கியலில், புத்தகத்தை நன்றாக படித்து இருந்தால் மட்டுமே, நல்ல மதிப்பெண் பெற முடியும்.

No comments:

Post a Comment