Monday, March 24, 2014

வாக்காளர் பட்டியல் பணி: 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் காத்திருப்பு

மதுரை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகளில், ஓர் ஆண்டில், குறைந்தது ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, 45 நாட்கள் வரை பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஞாயிறு விடுமுறையிலும் இவர்கள் பணியாற்ற வேண்டும். இதற்காக தேர்தல் கமிஷனால் மதிப்பூதியம் வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக இவ்வூதியம் வழங்கப்படவில்லை. இந்தாண்டு ஜூனில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், வேலைநாட்களை சரிக்கட்ட பெரும்பாலும் சனிக்கிழமைகளில் பள்ளி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, நாடு முழுவதும் மார்ச் 9ல் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதிலும், ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும், எவ்வித பயனும் இல்லை.
ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் பணிகளை ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் மேற்கொள்ள தயாராக உள்ளனர். பிற மாவட்டங்களில் இதற்கான மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், மதுரையில் மட்டும் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. விடுமுறை நாளில் செய்யும் பணிக்கு, "ஈடுசெய் விடுப்பாவது" வழங்க வேண்டும்" என்றன.

No comments:

Post a Comment