Friday, March 21, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதி, வார வேலை நாளான திங்கள்கிழமையன்று வருகிறது. இதை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால், மே இறுதியில் உள்ள ஞாயிற்றுக்கிழமைக்கு தேர்வை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்பதோடு, தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது இந்தத் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.
4,200 விண்ணப்பங்கள் விற்பனை: இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் இதுவரை 4,200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 2,300 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பித்துள்ளனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தத் தேர்வுக்காக மாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 700-க்கும் அதிகமானோர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆசிரியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment